தை மாத ராசி பலன்கள் – மகரம்!!

327

makaram

நல்லதோ, கெட்டதோ முடிவெடுத்து விட்டால் முன்வைத்த காலை பின் வைக்காமல் முடித்துக் காட்டுபவர்களே, தராதரம் அறிந்து பழகும் சிறந்த நிர்வாகிகளே, அதிகாரப் பதவி வந்தாலும் ஆணவப் படாமல் அடக்கமாக சாதிப் பவர்களே உங்களின் பாக்யாதிபதி புதன் உங்கள் ராசிக்குள் அமர்ந்திருப்பதால் செலவுகளை சமாளிக்கும் சக்தி உண்டாகும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரன் வக்ரமாகி 12ம் வீட்டிற்குள் நுழைந்திருப்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைக்கப் பாருங்கள்.

உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் இருக்கும் குரு உங்களை அலைக்கழிப்பார். மனதில் ஒருவிதமான கலவரத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். சட்டத்திற்குப் புறம்பான வகையில் எந்த உதவிகள் கிடைத்தாலும் அதை நீங்கள் மறுத்துவிடுவது நல்லது. ராசிக்கு 9ம் வீட்டில் செவ்வாய் நிற்பதால் சகோதர, சகோதரிகள் உறுதுணையாக இருப்பார்கள். ஆனால், அவர்களால் செலவுகளும் இருக்கும். தந்தையாரின் உடல்நிலை பாதிக்கும். உங்களுடைய ராசிநாதனான சனிபகவான் ராகுவுடன் சேர்ந்திருந்தாலும் கேந்திரபலம் பெற்று காணப்படுவதால் எதிர்ப்புகள், பிரச்னைகளை சமாளிக்கும் பக்குவம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் எதிர்ப்புகள் ஆங்காங்கே இருக்கும். தொகுதி மக்களிடையே சலசலப்புகளும் வரும். கோபப்படாமல் அமைதியாக மக்களை எதிர்கொள்வது நல்லது. தலைமைக்கு கட்டுப்படுங்கள். மாணவர்கள் சந்தேகத்தை மறைக்காதீர்கள். உடனுக்குடன் வகுப்பாசிரியரிடம் கேட்டு தீர்த்துக் கொள்ளுங்கள். கன்னிப் பெண்கள் நண்பர்களால் மகிழ்ச்சி உண்டு. ஆனால், உயர்கல்வியில் மதிப்பெண் குறையும். எனவே, கூடுதல் நேரம் ஒதுக்கிப் படிப்பது நல்லது. வேலை கிடைப்பது கொஞ்சம் தாமதமாகும். காதல் விவகாரங்களில் நேரத்தை வீணடிக்காதீர்கள்.

வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகரிக்கும். விளம்பர யுக்திகளை கையாளுவீர்கள். வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதத்தை அறிந்து கொள்வீர்கள். உணவு, மருந்து, ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் எதிர்ப்புகளும், ஏமாற்றங்களும் இருக்கும். ஆனால், உங்களின் விடாமுயற்சியையும், கடின உழைப்பையும் மூத்த அதிகாரி பாராட்டாவிட்டாலும் அதற்குமேலே இருக்கும் உயரதிகாரி மதிப்பார், உங்களை புரிந்து கொள்வார்.

சக ஊழியர்களுடன் சலசலப்புகள் வரக்கூடும். கலைத்துறையினரின் படைப்புகளை வெளியிடுவதில் தன்மானத்தை யோசித்துக் கொண்டிருக்க வேண்டாம். கொஞ்சம் விட்டுக் கொடுத்துப்போய் சில வாய்ப்புகளைப் பெற்று படைப்புகளை வெளியிட்டு வெற்றி பெறுவீர்கள். விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க வழி பிறக்கும். அடகிலிருக்கும் நகையை மீட்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். புதிய திட்டங்கள் தீட்டி உழைப்பால் உயரும் மாதமிது.

ராசியான திகதி:
ஜனவரி : 14, 15, 16, 24, 25, 26, 27
பிப்ரவரி : 3, 4, 5, 6, 11, 12.

சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 18ம் திகதி மாலை 6 மணி முதல் 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது.

பரிகாரம்: வேதாரண்யேஸ்வரரை தரிசித்து வாருங்கள். சொந்த ஊர் கோயிலின் கும்பாபிஷேகத்திற்கு உதவுங்கள்.